நான் சுரையா… நான் உங்கள் வீட்டில் ஒருத்தி…..நம் உணவை பங்கிட்டு உண்டிருக்கிறோம்… நாம் நண்பர்கள்…. ….எப்படி இந்த அநியாயத்தை உங்களால் செய்ய முடிகிறது… நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரி,மகள்,தாய்,மனைவி…..எப்படி இதை உங்களால் செய்ய முடிகிறது
——–கொலைகளத்தில் சுரையா
லட்சோபலட்ச வருடங்களாக பெண் ஆணின் உடமை என்ற கருத்தாக்கம் எல்லா நிலப்பரப்பிலும் இருக்கிறது என்பதற்கான ஒரு சாம்பிள்தான் நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலும் பிற்பாடு வெளிவந்த படமும். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வர்க்கப்பேதங்களின் பெயரால் அடக்கப்படுவதற்குமுன் சுரண்டப்படுவதற்கு முன் இயற்கையின் தேர்வில் இந்த அடக்குமுறை முதலில் பயன்படுத்தப்பட்டது பெண்ணின் மேல்தான். இன்றும் வெவ்வேறு ரூபங்களில் அதன் கோரமுகத்தையே காட்டுகிறது.
எறிய கற்களை எடுத்து ஒலி எழுப்பும் பின்னணி இசையுடன் கூடிய காட்சியும் கொலைகளத்திற்கு முன் சுரையாவின் சித்தி அவளுக்கு பாடும் தாலாட்டும் நெஞசை கிழித்துபோடுகிறது. மகனாய் இருந்தாலும் ஆண் அல்லவா….அவன் எறியும் கல் மானுடத்தின் மேல் எழுப்பப்படும் கல்லறை. வேறு என்ன எல்லா ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் பார்க்க வேண்டிய படம்
stoning of soraya M ஜூலை 4, 2021
Harmonium ஜூன் 27, 2021
ஓநாயும் ஆட்டுகுட்டியும் போல் குற்ற உணர்வில் வாழ்க்கையை நகர்த்திகொண்டிருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் கதை…. ஓநாயில் மிஸ்கின் கிறிஸ்துவ கல்லறையில் ஆட்டுக்குட்டியின் கதையை சொல்வதுபோல் இந்த படத்திலும் ஹீரோ ஆட்டுகுட்டியின் கதையை சர்ச்சில் வைத்து சொல்கிறார்.ஆனால் ஓநாய் இந்த படம் வருவதற்கு முன்பே வந்துவிட்டது. படத்தில் சிறுமி தொடங்கி வைக்கும் கடிகாரத்தின் சலனமற்று நிகழும் ஒத்திசைவு வாழ்வைதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.ஆனால் சுவாரஸ்யத்தின் தருணங்கள் எழுந்து நிற்கவே முடியாத சிறுமி தள்ளிவிடப்பட்டு தண்ணீரில் போராட இரு கை கால்களையும் உந்தி மேலெழ முயல்வதில் நீரை ஊடுரும் சூரிய ஓளியில் இயக்குனர் வைத்திருக்கிறார். இயக்குனர் முடிக்காமல் விட்ட கிளை கதைகள் இருக்கிறது…ஆனால் அவையெல்லாம் பார்வையாளனுக்கான கேள்விகள்
three monkeys மே 8, 2021
காந்தி சொன்ன அதே 3 குரங்குதான்…என்ன படத்தில் கொஞசம் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களாக வருகிறது. பெங்களூரிலிருந்து தொப்பூர் வழியாக வரும்போது நிற்கும் ரயிலிலிருந்து நிறைய குரங்கு குடும்பங்களை காணலாம். அடுத்த குரங்கை உணவுக்காக விரட்டும் அப்பா குரங்கு பிள்ளையை மடியில் கட்டிக்கொண்டு அவ்வப்போது சேட்டை பண்ணும் பிள்ளையை மிரட்டும் அம்மா குரங்கு அடிக்கடி சேட்டை செய்யும் பிள்ளை குரங்கு ஒரு நாடகம் போல் இருக்கும். இந்த படத்தின் கதையும் கிட்டதட்ட அதேபோல் காட்சிகள்தான். உணர்ச்சிகளை என்ஹான்ஸ் செய்யும் பேட்டர்ன்கள் இல்லை இந்த படத்தில் .குறிப்பாக பின்னணியில் ஓடும் இரயில் ஓசை, கார் கதவு கார் ஹார்ன் சத்தம் தவிர வயலின்கள் அழுது புலம்பவில்லை. செத்து ஒழி சனியனே என்ற வெறுப்பையும் அய்யோ குதிச்சிராத என்ற பதபதப்பையும் ஒரு சேர காட்ட அசாத்திய நடிப்பு திறன் வேண்டும். நடிகர்கள் எல்லாம் அட்டகாசம். காமெரா ஒரு கவிதை.அந்த பக்கமா ஈரானில்தான் நல்ல படங்கள் வரும் என்று நினைத்திருந்தேன்.டர்க்கிஸ்காரர்களும் நல்ல படங்கள் எடுக்கிறார்கள்.
womb
வாழ்க்கை என்பதோ நான் என்பதோ வெறும் ஞாபகங்கள்தான் என்பார் JK. ராபின் குக்கின் மியூட்டெசன் நாவலில் கடலில் அடியில் பூமிதட்டின் அந்த பக்கம் வாழும் மனிதர்களுக்கு சாவு என்பது கிடையாது. உடல் அழிந்துபோகும்.அழிவதற்கு முன் ஞாபங்களை, நான் என்ற பிரஞஞயை கம்யூட்டரில் பேக்கப் எடுத்து வைத்துகொண்டு வேண்டிய நிறம் மணம் குணம் உடலை உருவாக்கி அதற்குள் அதை இன்ஸ்ட்டால் செய்துவிடுவார்கள்.பழைய நான், புது உடல், விரும்பும் பூனை கண். இந்த படமும் இம்மாதிரி ஒரு காம்ப்ளிகேட்டடான அறிவியலை பேசுகிறது. க்ளோனிங்க்கில் ஆட்டுகுட்டியை உருவாக்கியதற்கு மதகுருமார்கள் கடவுளின் தொழிலை மனிதன் செய்ய கூடாது என்று சண்டைக்கு வந்தார்கள் இல்லையா?. இந்த படத்தின் நாயகியும் ஆத்மார்த்தமான காதலைகொண்ட காதலனை விபத்தில் இழந்து அவனது டி.என்.ஏ-வை எடுத்து குளோனிங்க் உருவாக்கி மறுபிறப்பு கொடுக்கிறாள். இங்கு நினைவுகள் கடத்தப்படவில்லை. உடல் மட்டும் ,இயல்பாக டி.என்.ஏ-இல் எழுதப்பட்டிருக்கும் அல்காரிதத்தால் வெளிப்படும் உடல்மொழிகள் மற்றும் சில விருப்பங்கள் கடத்தப்பட்டிருக்கிறது. அறிவியல் உள்ளே நுழையும்போது பண்பாடு என்று நாம் கற்பிதம் செய்த அனைத்தும் குலைந்து போகிறது. அறிவியலுக்கு உணர்வுகள் இல்லை இல்லையா?
The sacrifice மார்ச் 14, 2021
We Live
We have our ups and downs
we hope
we wait for somethings
we lost hope
we move closer to death
Born again to remember nothing
Andrei Tarkovsky-யின் இறுதிப்படம். கதையென்றால் பெரிதாக ஒன்றுமில்லை ஆனால் வெகு சிக்கலான கதை-:). அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்ல வேண்டுமென்றால் ஆப்ரஹாமிய மதகாரர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு வெகு நெருக்கமான ,சமூகத்தை/உலகை வாழ வைக்க தனிமனிதனின் தியாகத்தையும் அது தொடர்பாக பக்ரீத் என்ற ஈகை பெருவிழாவை பற்றியும் அந்த விழாவின் பிராசஸ் மற்றும் சிம்பாலிசத்தின் மூலம் மனிதன் சகமனிதன் மேல் 24/7 காட்டவேண்டிய கருணையையும் அன்பையும் அனுபவமாக சொல்லும் கதை. பக்ரீத் விவரங்களுகு கூகிலிட்டு அறிக.ஆப்ராஹிமிய பின்புலம் ஏன் சொன்னேனென்றால் இந்த கதையில் வரும் ஒரு பிரதான கதாபாத்திரத்திற்கு எக்ஸிடென்சிய தத்துவத்தின் ஒரு பிரிவின் பிரதிநிதியான கருண கொடூரமாக எக்ஸிஸ்டென்சிய வாதங்களை வைக்கும் நீட்ஸே ஆவி பிடித்திருக்கிறது. இன்னொரு கதாபாத்திரத்திற்கு கத்தோலிக்க பின்புலத்தில் இருந்துவரும் Kierkegaard ஆவி பிடித்திருக்கிறது அல்லது இயக்குனர் ரஷ்யாகாரர் என்பதால் தஸ்தாவேய்ஸ்கி ஆவி பிடித்திருக்கிறது. படத்தின் இறுதியில் தஸ்தாய்வேஸ்கி நீட்சேவை புரட்டி விடுகிறார். அதாவது எல்லா மனிதனுக்கு உள்ளும் நல்லவனும் இருக்கிறான் சாத்தானும் அல்லது தவறான கோட்பாடுகளால் பீடிக்கப்பட்ட ஆளும் இருக்கிறான். நடக்க சிரமபடும் குழந்தைக்கு எடையற்ற காலை தர துடிக்கும் ஆராய்ச்சி மனம்கொண்ட இரக்கமுள்ள விஞஞானி அணு ஆயுதத்தை பரிசோதிப்பதையும் குவிப்பதையும் வளர்ச்சி என்று புளகாங்கிதம் அடைவதையும் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? படத்தில் மூன்றாம் உலகப்போரெல்லாம் நடக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டும்தான் சிம்பாலிக்காக காட்டப்படுகின்றன. மற்றவையெல்லாம் அந்த தருணத்தின் பதட்டத்திற்கான கன்னத்தில் அறையும் காட்சிகள். மின்சாரமற்ற பனிகொட்டும் இரவில் இந்த டைரக்டர் என்ன உத்தியை பயன்படுத்தி அப்படி காட்சிபடுத்தியிருக்கிறான் என்று தெரியவில்லை. படம் நடக்கும் வீட்டிற்குள் அந்த காட்சி இழுத்துபோட்டு விடுகிறது. படத்தின் இறுதியில் இந்த மரமும் துளிர்க்கும் என்று சொல்லுன்விதமாக மெயின் கதாபாத்திரத்தின் பேரன் அந்த மர நிழலில் படுத்து உறங்கிகொண்டிருப்பான். நான் வித விதைச்சேன் உன் மவன் பழம் சாப்பிடுவான் ஒலக நாயகன் சொன்னது மாதிரி ஒரு நம்பிக்கையூட்டும் காட்சி
Andrei Tarkovsky இந்த படம் எடுத்துகொண்டிருக்கும்போதே கேன்சரால் பாதிக்கப்பட்டு ரிலீசாகி கொண்டாட்டத்தின் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டார் என்பது படத்துடன் தொடர்புடைய ஒரு தற்செயல்…கேன்ஸ் விருது வழங்கும் விழாவிற்கு வரமுடியாத டர்க்காவ்ஸ்கியின் சார்பாக விருது வாங்கிய மகனுக்கு இந்த படத்தை ட்ர்காவ்ஸ்கி டெடிகேட் செய்திருப்பது இன்னொரு தற்செயல்
Departures ஜனவரி 22, 2021
நோயுற்றவரை அல்லது மரணபடுக்கையில் இருப்பவரை காண தாத்தா பாட்டியாக இருந்தாலும் இந்த தலைமுறை பிள்ளைகள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை….சிறுவயதில் தெருவில் யார் இறந்தாலும் இறுதி சடங்கிற்கு அடக்கஸ்தலம் வரை அப்பா அழைத்து சென்று விடுவார் பிற்பாடு அது சுபகாரியங்களுக்கு செல்வதை விடவும் இறந்தவர்களை வழியனுப்பும்(Departure) சடங்குகளுக்கு செல்வது, இறந்தவர் யாராக இருந்தாலும் வாழும்போது எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவரை பெரும் மரியாதையுடனும் அவருக்கான பிரார்த்தனைகளுடன் அனுப்பும் பழக்கம் இஸ்லாத்தில் இருந்து வந்துள்ளது தெரிந்தது. தவிர குளிப்பாட்டுவதிலிருந்து குழிவெட்டுவதுவரை அறிந்துகொள்ளும் பழக்கம் வழிவழியாக இருந்து வந்துள்ளது. இனி வரும் காலங்களில் மேரேஜ் ஈவண்ட் மாதிரி இதுவும் ஒரு ஈவண்ட்டாக மாற கூடும். தோப்பிலின் ஒரு சிறு கதை உண்டு. கொள்ளை நோய் தொற்றிய காலத்தில் குழி வெட்டுவதை புனித தொழிலாககொண்ட ஒருவருக்கு நோய்தொற்று ஏற்பட்டு இறந்த பின்னால் அவருக்கு குழி வெட்ட யாரும் முன்வர மாட்டார்கள். அவரின் மனைவியே ஊருக்குள் வந்து சென்ற வெள்ளத்தில் உடலை அனுப்பிவிடுவார். சமீபத்தில் மனைவியின் நண்பர் ஒருவர் அகால மரணம் அடைந்துவிட அவரின் இறப்பு சடங்கை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள். சிலர் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதையெல்லாம் பார்க்கும்போது திகைப்பாக இருந்தது. அப்படியான ஒரு மரண ஈவண்ட் நிறுவனத்தில் கனவுகளை துறந்த ஒருவன் வேண்டாவெறுப்பாக சிக்கிகொள்வதையும் அது அவனுக்கு வாழ்க்கையின் வேறு கதவுகளை திறந்துவிடுவதையும் டிபார்ட்டர்ஸ் சொல்கிறது.
Norwegian wood ஜனவரி 10, 2021
முராக்கமி நாவலை படமாக்குவதெல்லாம் பெரிய சவால்…டெனட் படித்தில் வருவதுபோல் மாயகண்ணாடிக்கு அந்தாண்ட ரிவர்ஸ்ல நடப்பாங்கங்கிற மாதிரி இருக்கும் .ஆனால் ரிவர்ஸ் என்ட்ரோபின்னு அறிவியல் காரணம்லாம் சொல்ல முடியாது படிமம் புரியும் கவி மனது கதையுடன் எளிதாக ஒன்றிவிடும்….முராக்கமி கதையின் நாயகன் பெரும்பாலும் வேலை இல்லாமலோ அல்லது ஜப்பான்காரர்கள் தேனீக்களை விட சுறுசுறுப்பானவர்கள் என்ற கற்பித வரையறைகளை தாண்டி ரிலாக்சாக பியர் அடித்துவிட்டு வீட்டு பின்னாடி இருக்கும் தண்ணி இல்லாத கிணற்ற்றுக்குள் ஏணி போட்டு இறங்கி ஆகாசத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஒரு பாடல் /ஒரு கவிதை /ஒரு பெயர் சட்டென பால்யத்தின் பெரும் கதவுகளை திறந்துவிடும் சட்டென உள்ளே விழுபவர்களால் வெளியேற முடியாது.20 வருடங்களுக்கு பிறகு முகநூல் வழியாக வந்தடைந்த தோழி என்னிடம் சொன்னது காலத்தில் நீ அப்படியே உறைந்திருக்கிறாய் என்று இதனாலோ என்னவோ முராக்கமி மனதுக்கு மிக நெருக்கமாகிறார். அந்த ஹீரோ /வில்லன் அப்படியே நானாக நிறைய இடத்தில் நடமாடுகிறேன். நாவலில்/படத்தில் வருவதுபோல் இப்போ நீ எங்க இருக்க என்று தொலைபேசியில் கேட்கும் பெண்ணிடம் ஹீரோ நான் ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன் என்று சொல்லாமல் ஐயயோ நான் எங்க இருக்கேன்னு தெரியலியே ரேஞசில் பதில் சொல்வார் … நம் வாழ்வு என்பது யார் காணும் கனவோ அல்ல படுக்கையில் இருந்து எழ விரும்பாது நாமே காண்பது
Beyond the Hills
“Beyond right and wrong there is a field. i will meet you there “
———-Rumi
எனக்காக பிரார்த்தனை கூட செய்யாதே உன் பிரார்த்தனையால் சொர்க்கத்தை போவதை விட நரகத்திற்கு போவதையே நான் விரும்புவேன்னு அறிவியல் ஆன்மிகத்த பார்த்து கிளைமாக்ஸ்க்கு முன்னாடி சொல்லும் அப்படி ஒரு கதை… நம் பாடபுத்தகங்களில் கடவுள்களை துதித்த அளவுக்கு போலி பண்பாட்டு பெருமிதங்களை கோடிட்டு காட்டிய அளவுக்கு வைரஸ் காய்ச்சல் சொன்ன அளவுக்கு மனதுக்கும் நோய் வரும் காதில் நமக்கு மட்டும் கேட்கும்படியான குரல் கேட்கும் கண்ணில் காட்சி நமக்கு மட்டுமே தெரியும்படியாக தெரியும் மூளை சொல்லும் வேகத்துக்கு கை பொருளை எடுக்காது என்றெல்லாம் மேலெழுந்தவாரியாக கூட சொல்லப்படவில்லை. தவிர சட்டம் ஒத்துகொண்ட இருபால்/ஒருபால் சேர்க்கையை பற்றியோ மூன்றாம் பாலினத்தவர் பற்றியோ இல்லை. இவற்றையெல்லாம் பண்பாடு கடவுளுக்கு பிடிக்காது சாத்தான் வேலை என்றுதான் ஒளித்து ஒளித்து வைத்து நிறைய அப்பாவிகளை வதைத்துகொண்டிருக்கிறோம். வஞசனை பேய்கள் என்பார் அந்த மரத்திலென்பார் இந்த குளத்திலென்பார்னு பாட்டு சொன்னா மட்டும் பத்தாது அர்த்தமும் சொல்லணும்.
குணா கமலஹாசர் எகிறிஎகிறி நடித்த படம் . கொஞசம் இயல்பாக இருந்திருந்தால் இந்த படம்போல் இருந்திருக்கும்.
Tokyo story
“One cannot serve one’s parents beyond the grave” ———–Tokyo Storyஅன்பே வா படத்தில் ஃபிளைட் விட்டு இறங்கி வரும் எம்.ஜி.ஆரிடம் கேட்பார்கள் ஜப்பான் மக்கள் எப்படிபட்டவர்கள் என்று அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் எறும்பை விட சுறுசுறுப்பானவர்கள் என்று சிலாகிப்பார். தலீவர் கூட சிங்கப்பூர் லீ குவானை மேற்கோள் காட்டுவார். மாற்றம் முன்னேற்றம் உழைப்பு உயர்வு காசு துட்டு எல்லாம் சரிதான். எதை பெற்று எதை இழந்தீர்கள் என்று ஒன்று இருக்கிறதல்லவா. மதிப்புமிக்கது பொருளாதாரம் வசதியான மிணுமிணுக்கும் வாழ்க்கைதானா? அதற்காக உறவுகளை இழந்தாலும் சரியா? அழகிய தருணம் என்பது இந்த படத்தில் மருமகளாக வரும் நொரிக்கோ உள்ளங்கைக்குள் வைத்து பாதுகாப்பதுதானே.ஒரு வரி கதை என்றால் வயதான கிராமத்தில் இருக்கும் பெற்றோர் அவர்களை கவனிக்காத டோக்கியோ நகரில் மிகவும் தேனிக்களை விட சுறுசுறுப்பாக உழைத்து முன்னேறும் பிள்ளைகள். இந்த மாதிரி கதைகள் நம் நாட்டில் எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம். தறுதலை பிள்ளைங்க சாமி மாதிரி கொடூரமான பாவனைகளோ நன்றிகெட்ட மகனை விட நாய்கள் மேலடா மாதிரியோ உலுக்கி இயக்குனர் உங்களை அழ வைக்க மாட்டார். பசீர் கதைகளில் வரும் எள்ளலை போல அல்லது பிக் பாஸ் ரம்யாவின் சாஃப்ட் ஹர்ட் போல் லேசாக அந்த வசனங்களை காட்சிகளை எடுத்திருப்பார். இருந்தாலும் வீடற்று அவர்கள் டோக்கியோ போன்ற நகரில் தெருவில் விடப்படும்போது உள்ளூர ஒரு வலி பரவி வேகமெடுக்கிறது. உறவுகளை பற்றி படம் எடுப்பவர்களுக்கு இந்த படம் ஒரு ரெஃபரன்ஸ்
TRACKS திசெம்பர் 31, 2020
2000 மைல் ஆஸ்திரேலிய பாலைவனத்தை கால் நடையாக 3 ஒட்டகங்களுடனும் ஒரு நாயுடன் கடந்த பெண்…..வாழ்க்கையை பயணங்கள மாற்றி போடுகிறது என்றால் பயணங்களில் வாழ்க்கையை தேடிய பெண்…
படமாகவும் வந்திருக்கிறது.