நிஜங்கள் என்னை
நேர்காணல் நடத்தும்போது
நேற்றைய நிழலாய்
நீ திசைகாட்டி செல்கிறாய்!
நீயா இது….
என் முன் நிற்கும் நீயா இது?
குளக்கரை பாசிகளாய் என்னுள்
படர்ந்து பரந்திருக்கும்
நீயில்லை நீ…….!
கருணை வழிந்த கண்களில்
கொடூரம் சிந்தும்
நீயில்லை நீ…….!
அளவிலா அன்புடையவனெயென நானும்
அதிகரிக்கும் அன்புகொண்டவளெயென நீயும்
நம்மால் சித்தரிக்கப்பட்ட
ஒரு மழைகாலத்தில் என்னுடனிருந்த
நீயில்லை நீ………..!
உன்னுடல் இயக்கும்
உன் இதயத்துடிப்போடு
இயங்கிகொண்டிருந்த நாட்களில்
உன் ஒற்றை புன்னகையால் என்
உயிருக்குள் ஒளிந்த நீ
நீயில்லை……….!
அன்று நான் வேறு,
நீ வேறு என்ற நீ
நீயில்லை…….
நிச்சயமாக ‘நான்’ பிரசவித்த
நீயில்லை.