“என் உயிரினும் இனிய,தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையான டெட்லைனில் பல டெலிவரிகளை கொடுத்த தங்க தலைவர் பிராஜெக்ட் மானேஜர் அவர்களே,தலைவன் எவ்வழியோ தானும் அவ்வழியென்று கோடு மாறாமல் தலைவரின் இரு கைகளை உயர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீடர் அவர்களே,டப்பாங்குத்து ஆடும் பக்குகளை கும்மாங்குத்து குத்த இரவும் பகலும் அயராது கணிப்பொறியை பார்த்திருக்கும் டெக்கினிக்கல் லீட் அவர்களே,குறை சொல்லி தலைவன் டெஸ்ட் லீட் அவர்களே,மற்றும் அடிப்பொடிகளான பிராஜெக்ட் அங்கத்தினர்களே………….உஸ் யாருடா அவன் ஒரு காப்பச்சீனோ கலக்கு தொண்ட வறண்டுபோச்சு”.
இன்னும் சிறிது நாளில் இதே மாதிரி மேடை வசனங்களை மென்பொருள் துறையில் கேட்டாலும் ஆச்சரியமில்லை அந்த அளவு அரசியல்(பாலிடிக்ஸ்) மென்பொருள் துறையில் புகுந்து விளையாடுகிறது. மென்பொருள் துறையில் மட்டும்தானா மற்ற துறைகளில் இல்லையா என முணுமுணுப்பவருக்கு, மற்ற துறைகளில் இருக்கும்,ஆனால் மென்பொருள் துறையில் அதிகமோ என யோசிக்க வைக்கிறது.
புதிதாக இத்துறையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு,அல்லது மிகப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய நிறுவனங்களில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இதன் வீச்சு குறைவாகவே இருக்கும். மேலே போக போகத்தான் ‘கப்’ அடிக்கும்.
அப்படி என்னதான் அரசியல்ங்கீறீங்களா?????? நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே “இந்த வாய் மட்டும் இல்லன நாய் கூட நக்காது” னு அந்த மாதிரி சில பேர் வேலையே செய்ய மாட்டார்கள்.உதாரணத்துக்கு சிறு குழு தலைவர்கள்(மாடுல் லீட்,டெக் லீட்).ஆனால் அவர்கள் குழுவில் சிலர் சாதிக்கும் விஷயங்களை தான் சாதித்ததாக பிராஜெக்ட் மானேஜர்களிடம் பட்டியலிடுவார்கள் . அந்த அப்பாவி குழு உறுப்பினரோ இது எதுவும் தெரியாமல் வலம் வருவார்.
அது தவிர ஏதாவது பிரச்சனை என்றால் குழு உறுப்பினரை கொண்டு சென்று முன் வரிசையில் கேடயமாக நிறுத்தும் வித்தையும் இந்த குழு தலைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.பிராஜெக்ட் மானேஜருக்கு ஓரளவாவது டெக்கினிக்கல் விஷயங்களை புரிந்திருக்கும் திறனிருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த குழு உறுப்பினருக்கு சங்குதான்.
இப்படி அடிப்பட்டு உதைப்படும் குழு உறுப்பினரும் இதை சமாளிக்க அரசியல் படிகளில் கால் வைக்க ஆரம்பித்து விடுவார்.சில பேர் குழு தலைகளுக்கு ஜால்ரா தட்டி நாளை கடத்துவார்கள். இன்னும் சில பேர் காதிலே வாங்காமல் மங்குனி பாண்டியாட்டம் வந்து போவார்கள்.ரோஷக்கார பிள்ளைகள்
“பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
என ரௌத்திரமாவார்கள் அப்புறம் என்ன சில நாடகளிலேயே அடுத்த வேலைக்கு தாவி விடுவார்கள். பெரும்பாலும் எல்லா நிறுவனங்களிலும் பணி விலகலுக்கு காரணிகளில் மேலாளர் பெயர் இருக்கும்.இங்குதான் மற்ற நிறுவனங்களுக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. மற்ற நிறுவனங்களில் பணி விலகல் அளவுக்கு போவது மிகவும் குறைவு ஆனால் மென்பொருள் நிறுவனங்களில் இது மிக அதிகம். மென்பொருள் நிறுவனங்களும் பூனைக்கு(மேலாளர்களுக்கு) மணி கட்டும் வேலையை செய்வதில்லை. அ போனா ஆ என்னும் நிலையில்தான் இருக்கிறார்கள். எங்கள் ஊழியர்கள்தான் எங்கள் சொத்து என்று சொல்லும் ஒரு பெரிய நிறுவனம் கூட விதி விலக்கல்ல.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!!!!!!