நாவல் விமர்சனம் 2:
முன் கதை சுருக்கத்தை தற்கொலை ஒன்றுடன் முடிக்கும்போது அதிர்ந்து அடுத்தடுத்த பக்கங்கள் புரள தொடங்குகிறது. இருந்தாலும் துக்கம் தொண்டையை அடைத்ததில் எனக்கும் உடன்பாடில்லை-:) கடைசி குறுஞ்செய்தியை அழிக்கும் மாபெரும் துயரத்தை கடக்கும் தருணங்கள் சொல்லப்பட்டிருக்கும்போது. செல்போன் இன்றைய காலத்தின் சந்தோஷ கஷ்டங்களின் குறியீடாக இருக்கிறதல்லவா. ஒரு நட்பை காதலை உடைக்கும்போது சம்பந்தபட்டவரின் எண்ணை அழிப்பது எத்தனை வாதையை தருகிறது. அழிந்த பிறகும் நினைவில் அந்த எண் சுழன்று சுழன்று வருகிறது. அழைக்கும் பட்டனுக்கும் கேன்சல் செய்யும் பட்டனுக்குமிடையே எத்தனை முறை விரல்கள் மாறி மாறி பயணிக்கின்றன.
அப்புறம் அந்த தற்கொலை. நானும் பல மனிதர்களை கடந்திருக்கிறேன் தற்கொலைக்கான சுவடுகளை அவர்கள் எப்போதும் தாங்கியிருந்ததில்லை. அவர்களின் முதுகுக்கு பின்னே அது எப்போதும் பயணப்பட்டிருந்திருக்கிறது. அது அதற்கான தருணங்களுக்காய் காத்திருந்திருக்கிறது.
நான் முதன் முதலில் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் ஐஐடி யில் இருந்து வந்த ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்டான்.
இந்த உலகம்
எங்கோ செல்கிறது
நான் எங்கோ
சென்றுகொண்டிருக்கிறேன்
என்று முடியும் ஒரு ஒரிய கவிதையை தவிர வேறு காரணங்கள் எதையும் அவன் தற்கொலை குறிப்புகள் சொல்லவில்லை