அன்பெனப்படுவது யாதெனில்
பனி பாலையில்,
கடல் ஆழங்களில்
துவங்கும் தாகம்
அன்பெனப்படுவது யாதெனில்
சில விந்து துளிகளும்
இறுதியாய் எஞ்சும்
கோடித் துணியும்
அன்பெனப்படுவது யாதெனில்
தொப்புள் கொடியில்
உறையத்துவங்கும் குருதி.
கடைவாயில் ஒழுகும்
கடைசிதுளி பால்
அன்பெனப்படுவது யாதெனில்
பசலைபடரும் தேகத்திற்காய்
சாட்டையடியில் தடதடக்கும்
குதிரை குளம்பொலியும்
யாவற்றிற்கும் பின்னதான
சில கோரிக்கைகளும்
அன்பெனப்படுவது யாதெனில்
அன்பெனும் இருப்பில்
இல்லாதிருப்பது!