“ஏம்பா தரகரே….செல்லமா வளத்த பொண்ணு கம்யூட்டர் இஞ்சினியரெல்லாம் வேண்டாம் ஏதாவது காய்கறி விக்கிற வரன் இருந்தா சொல்லு” என்று எங்கோ படித்தது நகைச்சுவையாய் இருந்தாலும் இதேபோல் ஒன்று நிஜமாய் எனக்கு நடந்தது. 2001ல்(இதே போல் ஒரு நிலை அமெரிக்காவில் இருந்த கால கட்டத்தில்) பெங்களூரில் வீடு தேடி அலையும்போது வீட்டு சொந்தக்காரர்கள் கம்யூட்டர் கம்பெனியா வாடகை ஒழுங்கா தருவியா என்று மிரட்டினார்கள்.அதற்கு பிறகு வந்த வருடங்களில் இராஜ மரியாதை கிடைத்தாலும் எப்போனாலும் சங்குதூவானுங்க என்று கொஞ்சமாவது சேமிக்கும் பழக்கம் பிற்பாடு ஏற்பட்டது.அமெரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் அமெரிக்கர்கள் சேமிப்பதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தியர்கள் அனாவசியமாய் செலவழிப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதுதான். 21/22 வயதில் சம்பாதிக்க தொடங்கும் இந்திய தலைமுறை அப்படி ஒன்றும் கெட்டு போனதாக தெரியவில்லை.கலாச்சார சீரழிவுகளுக்கு கம்யூட்டர் ஆசாமிகளை குறை சொல்பவர்கள் கம்யூட்ட நுழைவதற்கு முன்னால் மெரீனா பீச்சில் புனிதமான காதல்கள் மட்டுமே அரங்கேறியிருந்ததா என்று சொல்ல வேண்டும். கை நிறைய சம்பளத்தை பார்த்து ஒரு வருடம் இரண்டு வருடம் ஆடுபவர்கள் அதற்கு பின் நிறைய சேமிப்பில் நாட்டம் காட்டுகிறார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.கம்யூட்டர் பணி என்பது கணவன் மனைவி பந்தம் போல் அல்ல. அது இருபக்கங்களிலும் இலாப நோக்கில் நடைபெறும் ஒரு தினசரி அலுவல். பிராஜக்ட் இல்ல அதனால் இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை என்று இந்த வருடம் நிறுவனங்கள் நாக்கு துருத்தினாலும், “கைல பத்து ஆ:பர் இருக்கு சம்பளம் இரண்டு மடங்கா உயர்த்தரதா இருந்தா பேச்சு வார்த்தைக்கு யோசிக்கிறேன்!” என்று போன வருடம்வரை பிலிம் காட்டியதையும் மறக்க கூடாது. உலகமயமாக்கலின் பலன்கள் மட்டும் வேண்டும் நஷ்டங்கள் வேண்டாம் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.
மழை காலத்திற்காய் உணவு சேமிக்கும் எறும்பை போல் எந்த சிக்கல் வந்தாலும் அடிப்படை தேவைகள் ஆட்டம் காணாத அளவுக்கு அக்கவுண்டில் பணம் இருந்தால்(குறைந்த பட்சம் ஒரு வருடம் தாக்கு பிடிக்க) தப்பி பிழைப்போம்.இது தவிர எனக்கு தெரிந்த வேறு வழிகள்
1)குரங்காட்டம் கம்பெனி கம்பெனியா தாவும்போது அந்தரத்தில் தொங்கும் பிராவிடண்ட் பண்டுகளில் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வழி முறைகளை யோசிக்கலாம்
2) மார்ச் முதல் வாரத்தில் யோரோ சொல்லி எவரோ நீட்டிய படிவத்தை நிரப்பி வருமான வரிக்காக சேமித்த பத்திரங்களை ,சேமிப்புகளை தேடிப் பிடித்து அதில் கை வைக்கலாம்.
3) வார இறுதி பார்ட்டிகளுக்கு சில ஆயிரங்களில் செய்யும் மதுபான சைட் டிஷ் செலவினங்களை நிறுத்தி விட்டு பறக்கும் இரயிலில் மெரீனா வந்து கிரிக்கெட் விளையாடி செல்லலாம்.
4)ஐபோட்,புளுபெர்ரி என்று காதலிக்கும்,கேர்ள் பிரண்டுக்கும் காசு செலவழிப்பவர்கள் “அலைபேசி ஒலியெல்லாம் உன் குரலாக….” என்று கவிதை எழுதி பழகலாம் காதலி தெரித்து ஓடினால் காதலுக்கு ஒரு இடைவேளை விட்டு சொந்த ஊர்களுக்கு அவ்வப்போது சென்று சுற்றத்தையும் நட்பையும் பார்க்கலாம்.
5)தெரு முனைக்கும் ஸ்டைலாக ஆட்டோ என்றழைப்பவர்கள் முடிந்த மட்டும் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து நிறைய கொழுப்புருக்கலாம்.
6) எதன்பொருட்டு எவருக்காக என்று தெரியாமல் பொழுதை கழிக்க ஷாப்பிங் மால்களில் சகட்டுமேனிக்கு அள்ளி இறைத்தவர்கள் நிலா வழியும் இரவில் அலை விரல் தொடும் தூரத்தில் அமைதியாக அமர்ந்து இயற்கையை இரசிக்கலாம்
7) இது தவிர பெரிதாக வீடு,கார் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
2000,2001 அடி வாங்கிய கணிப்பொறி துறை மாண்டு விடவில்லை. வீறிட்டு எழுந்தது. கணிப்பொறி துறை இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்னால் தங்கத்தை அடகு வைத்த தேசம் பத்து வருடங்களுக்கு பிறகு கேத்ரீனா புயல் அமெரிக்காவை தாக்கிய போது பெரும் நிவாரணம் டாலர் தேசத்திற்கே வழங்கும் அளவுக்கு உயர்ந்து நின்றது.
இரவுக்கு பின்னால் எப்போதும் ஒரு பகல் உண்டு கண்ணை இறுக்க மூடி இருள் என்று கூவினாலும்!!!!