கடவுளின் பூமி(Gods Own Country) என்றழைக்கப்படும் கேரளா காண கண்கோடி வேண்டும் என்று பரவசப்படுத்தும் இயற்கை காதலர்களின் பூமி. இன்னும் அதன் புவியியல் அமைப்பு எனக்கு புரியாத புதிர்தான். முதன்முதலில் கண்ணூர் மாவட்டத்துக்கு சென்றபோது பேருந்து மலைமேல் ஏற்க்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது.சிறிது நேரத்தில் பார்த்தால் கடல். மலையில் ஏதடா கடல்….. நேற்று இரவு குடித்த கோலாவில் குவார்ட்டர் சேர்த்துட்டாங்களோனு ஒரு சம்சயம் தோன்றியது. அது தவிர பல வீடுகள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட சாய்ந்து மரங்களின் இடைவெளியில் இருப்பது இங்கு எங்கும் காண கிடைக்கும், ஒன்று இருந்தால் மேல இல்லன பள்ளத்(தாக்குள)துக்குள்ள என்றுதான் பெரும்பாலான வீடுகள் அமைந்திருக்கும். மழை இங்கு இன்னொரு அதிசயம்.போன புதிதில் இந்த ஊருக்காரங்கே எப்ப பாத்தாலும் கொடயோட திரியிறாங்கே என்று அதிசயப்பட்டதுண்டு ஒரு ஆர்ப்பாட்டமான மழையில் மாட்டும்வரை. மழை விட்ட சிறிது நேரத்தில் இங்க மழை பெய்ஞ்சதா என்று சந்தேகப்படும்படியாய் அதன் சுவடுகள் அழிந்துபோயிருக்கும்.
கடவுளின் மக்கள்-மிகவும் தெய்வ பக்தியுள்ள மக்கள். யாரும் சொல்லி தராமலேயே இடதுசாரி சிந்தனையில் ஊறியவர்கள்.பணிக்கு சேர்ந்த முதல் நாளிலே இங்கு ஹர்த்தால்.காரணம் ஏதோ சாதரணமாக தோன்றியதால் அசட்டையாக இருந்து அன்று முழுவதும் பட்டினி. நம் ஊரில் மாதிரி பாதி கதவை திறந்து வியாபாரமெல்லாம் இருக்காது. ஏழை மீன் வியாபாரியானாலும் வியாபார நேரத்தில் மட்டும்தான் வியாபாரம். பெரும்பாலும் இவர்கள் கெல்ப்(Gulf) சென்று பொருள் ஈட்டுவதை இலட்சியமாய்கொண்டிருப்பார்கள்.வீட்டுக்கு ஒருவராவது பெரும்பாலும் அரபு நாடுகளில் இருப்பார்.
பெண்கள்-காந்த கண்ணழகி உனக்கு மினிஸ்ரில இடம் பாக்கிறேன் என்று கவுண்டமணி சொல்வதுபோல் அழகிய கண்களுடையவர்.கேரள பெண்கள் என்றதும் முண்டு கட்டி வருவார்கள் என்று ஜொல்லு வடிய வந்தீர்களானால் சாரி ஜெண்டிமென் ஆ ஆல்காரெல்லாம் மரிச்சு போயி. இவங்களும் ஜீன்ஸ்க்கு மாறிட்டாங்க!!!!!.
படைப்பாளிகள்- படிப்பாளிகளின் பூமி மட்டுமல்ல(100% படித்தவர்கள்) படைப்பாளிகளின் சொர்க்க பூமியும் இது.
வைக்கம் முகம்மது பஷிர்(பாத்துமாவோட ஆடு,சிங்கிடிமுங்கன்…..)
தகழி சிவசங்கரம்பிள்ளை(செம்மீன்,தோட்டியின் மகன்)
வாசுதேவன் நாயர்( நாலு கட்டு,வாரணாசி……)
பத்மராஜன்
போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகள் படைத்ததும் படைத்த படைப்பாளிகள் போற்றப்படுவதும் வேறு எங்கும் காண கிடைக்காதது. நம் ஊரில் அதிகம் அறியப்படாத சுந்தர ராமசாமி,ஜெயமோகன் போன்றோரெல்லாம் இங்கு போற்றத்தக்கவர்களாய் இருப்பவர்கள்.
பிறமொழிகாரர்கள் மலையாளம் அறியாமல் இங்கு பிழைப்பது கடினம் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் உள்பட. ஆங்கிலம்,ஹிந்தி ஏதும் மனசிலாகாது….கொறச்சு தமிழ் அறியும் அத்தரயுள்ளு. அரசாங்க இயந்திரம்(அதிகாரிகள் மட்டத்தில்) இங்கு நியாயமாகவே இருக்கும் மற்ற மாநிலங்களை விட.
சினிமா- நல்ல சினிமா இங்குதான் எடுக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தும் வெறித்தனமான இரசிகர்கள் இங்கு குறைவு.
வரு இவிட………………


