சுஜாதா எனது ஆசான்.எனது தொழில் சார்ந்த கல்விக்கும் எனது இலக்கிய தாகத்திற்கும்.படைப்பாளியாக இன்னும் அடியெடுத்து வைக்காவிட்டாலும் ஒரு வாசகனாக அவர் சுட்டி காட்டிய இலக்கியத்தின் பக்கங்களில் பயணித்துகொண்டிருக்கிறேன்.பாக்கெட் நாவல்களின் பாதங்களில் கட்டுண்டு கிடந்த
எனது இரசனையை தீவிர இலக்கியத்தின்பால் செல்ல தூண்டியவரும் அவரே.அவருக்கும் எனக்குமான இலக்கிய தொடர்பு ஒரு வாசகனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பு மாத்திரமே என்றபோதிலும் அவரது படைப்புகள் வாயிலாக நிறைய கற்றுகொடுத்திருக்கிறார்.
சார்பியல்பு தத்துவத்தை எளிமைபடுத்தி ஏன் எதற்கு எப்படியில் விளங்க வைத்தது முதல் ஆழ்வார் பாடல்களை இரசிக்க வைத்தது வரை.
மாணவனாக இருந்தபோது 1998 ல் கோவை CIT-க்கு கணிப்பொறி சார்ந்த ஒரு போட்டிக்கு சென்றிருந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.கூச்சம் காரணமாக தனிப்பட்டு உரையாடாவிட்டாலும் கூட்டத்தோடு சேர்ந்து செய்த கலந்துரையாடலில் அவர் எனக்கு என் தொழில்(மென்பொருள்) சார்ந்த பல வழிகளை திறந்து காட்டினார். படிக்கும் காலங்களில் நாங்கள் மைக்ரோசாப்டின் படைப்புகளுக்கு விசிறிகளாக இருந்தோம்.அவரிடம் உரையாடிய பிறகு எங்கள் குழுவில் பெரும்பாலோர் ஜாவாவுக்கு மாறிவிட்டார்கள். அவர் அப்போது ஜாவா பற்றி சொன்ன சாத்தியங்கள் இன்று சத்தியமாயிருக்கிறது.
இயல்பான நடையில் கதை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. திடுக்கிடும் திருப்புமுனைகள் வரும் கட்டங்களிலும் பத்து பக்கத்துக்கு வர்ணித்து புலம்பாமல் ஒரே வரியில் அதன் ஆழத்தை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. உதாரணம் கரையெல்லாம் செண்பகப்பூவில் வரும் அந்த முடிவு
”என்ன சொல்ல நினைத்தாய் வெள்ளி”
சொல்லாமல் போன காதலின் சுமையாய் இந்த ஒரு வரிக்குள் அடக்கிவிடுகிறார்.
1980களில் அவர் ஜீனோ தொடரில் எழுதிய Hologram,robot மற்றும் ‘ஆ’ வில் எழுதிய Schizophrenia போன்ற சிக்கலான விஷயங்கள் எல்லாம் கதையோடே இழையோடி கடைசி வாசகனுக்கும் சென்று சேர்ந்தது.
அவர் ஒரு விஞ்கான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில்
கேட்கப்பட்டதுண்டு. அதற்கு அவரின் பதில்
“மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்”
சுவாரஸ்யம் போய்விட்டதா சுஜாதா??