இது
தகப்பனின்,தம்பியின்
கணவனின்,காலச்சுவட்டில்
தன்னை தேய்த்தெடுத்த
கிழவனின் சாவு படுக்கை!
கண்ணோரம் கடிக்கும் எறும்பு
செயல்படா கைகள்
காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி
உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன்
ஊசலாடும் உயிர்….
அலையலையாய் வந்துபோகும்
அம்மா முகம்
அருகே வாடா என்றழைக்கும்
அப்பா கரம்
காதில் ஒலிக்கும்
எட்டு வயதில் வளர்த்த
சண்டை சேவல் கூவல்
பிறந்துகொண்டிருக்கிறேனா….
இறந்துகொண்டிருக்கிறேனா…
எதுவென்று தெரியாத
ஒரு நிசப்தத்தில்
ஆட்டோவிற்கும் ஆம்புலன்சிற்கும்
வாடகை வித்தியாசம்
விசாரித்துகொண்டிருக்கும் மகன்
ஆயாசமாய் கண்களை மூடி
அடிக்குரலில் கேட்கின்றேன்
‘இறைவா எனது பயணம் தொடங்கட்டும் ‘